இன்றைய 4வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 30 ஆண்டுகால வரலாற்றை மீண்டும் படைக்குமா என இலங்கை ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிப்பதால் இன்று நடைபெறும் போட்டி முக்கியமானது.
இப்போட்டியில் இலங்கை அணி வெற்றிப் பெற்றால் தொடரின் வெற்றியாளார் ஆகலாம். அத்துடன் இலங்கை 30 ஆண்டுகளுக்குப் பிறகு இருதரப்பு ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்றது என்னும் சாதனையும் நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா வீரர்கள் காயம் காரணமாக இலக்கைக்கு எதிரான போட்டிகளில் இருந்து விலகியிருப்பது இலங்கை அணிக்கு சாதகமாக இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அதேவேலையில் இலங்கை அணியிலும் ஹசரங்கா காயம் காரணமாக விளையாடவில்லை. தற்போது குஷால் மெண்டிஸ்க்கும் காயம் ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் இருக்கிறார். இன்று நடைபெறும் போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது.
“இந்தத் தொடரில் வெற்றி பெறுவதற்கு இது ஒரு அருமையான வாய்ப்பு. நாங்கள் கடைசியாக 1992இல் இருதரப்பு ஒருநாள்போட்டி தொடரில் ஆஸ்திரேலியாவை எங்களது சொந்த மண்ணில் வீழ்த்தினோம். உலகத்திலேயே சிறந்த அணிகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவை இத்தொடரில் வெல்லுவோம்” என இலங்கை கேப்டன் ஷனாகா கூறியுள்ளார்.