கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியை கத்தாருக்கு வழங்கியது தவறு: ஃபிஃபா முன்னாள் தலைவர்

அமெரிக்காவுக்குப் பதிலாக கத்தாருக்கு உலகக் கோப்பைப் போட்டி வழங்கப்பட்டது.
கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியை கத்தாருக்கு வழங்கியது தவறு: ஃபிஃபா முன்னாள் தலைவர்

2022 கால்பந்து போட்டி கத்தாரில் நவம்பர் 20 முதல் டிசம்பர் 18 வரை நடைபெறுகிறது. தோஹாவைச் சுற்றியுள்ள 8 மைதானங்களில் 64 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 2022 கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் 32 அணிகள் பங்கேற்கின்றன. நவம்பர் 20 அன்று தொடக்க ஆட்டத்தில் கத்தார் - ஈகுவடார் அணிகள் மோதுகின்றன.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ஃபிஃபா சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. ஃபிஃபா 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2018-ல் ரஷியாவில் முதல்முறையாக நடைபெற்றது. தரவரிசையில் 7-வது இடத்தில் இருந்த பிரான்ஸ் அணி உலகக் கோப்பையை வென்றது. குரோஷியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது. 2026-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பை அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா நாடுகள் பெற்றுள்ளன. இப்போட்டியில் 48 நாடுகள் பங்கேற்கின்றன.

இந்நிலையில் கத்தாருக்குக் கால்பந்து உலகக் கோப்பை போட்டியை வழங்கியது தவறு என ஃபிஃபா அமைப்பின் முன்னாள் தலைவர் செப் பிளேட்டர் தெரிவித்துள்ளார். 2010-ல் கத்தாருக்கு உலகக் கோப்பைப் போட்டி அறிவிக்கப்பட்டபோது ஃபிஃபா அமைப்பின் தலைவராக பிளேட்டர் பணியாற்றினார். அவர் கூறியதாவது:

கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியை நடத்தும் அளவுக்கு கத்தார் பெரிய நாடு அல்ல. கால்பந்தும் உலகக் கோப்பையும் அதற்கு மிகப் பெரியவை. உலகக் கோப்பைப் போட்டி கத்தாருக்கு வழங்கப்பட்டது தவறான முடிவு. அப்போது ஃபிஃபா தலைவராக நான் இருந்ததால் இதற்குப் பொறுப்பேற்கிறேன். ஐரோப்பிய கால்பந்து சங்கக் கூட்டமைப்பின் வாக்குகள் கிடைத்ததால் அமெரிக்காவுக்குப் பதிலாக கத்தாருக்கு உலகக் கோப்பைப் போட்டி வழங்கப்பட்டது. இதுதான் உண்மை. கத்தாரில் கால்பந்து மைதானங்களைக் கட்டும் பணிகளில் ஈடுபட்ட புலம்பெயர் தொழிலாளிகளுக்கு நேர்ந்த சம்பவங்கள் பற்றிக் கேள்விப்பட்டதால் 2012-லிருந்து கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியை நடத்தும் நாடுகளைத் தேர்வு செய்வது தொடர்பான விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதற்குப் பிறகு சமூக நிகழ்வுகள், மனித உரிமைகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன என்றார். 

2022 கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெற்ற அணிகள்

ஐரோப்பா

ஐரோப்பாவிலிருந்து 13 அணிகள் பங்கேற்கின்றன. 64 வருடங்களுக்குப் பிறகு வேல்ஸ் தகுதி பெற்றுள்ளது.

பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, இங்கிலாந்து, செர்பியா, ஸ்பெயின், பெல்ஜியம், டென்மார்க், நெதர்லாந்து, குரோசியா, ஜெர்மனி, போர்ச்சுகல், போலந்து, வேல்ஸ்.

தென் அமெரிக்கா

4 அணிகள் பங்கேற்கின்றன. 

பிரேசில், ஆர்ஜெண்டினா, உருகுவே, ஈகுவடார்.

வட அமெரிக்கா

4 அணிகள் பங்கேற்கின்றன. 1986-க்குப் பிறகு கனடா முதல்முறையாகத் தகுதி பெற்றுள்ளது. 

கனடா, மெக்சிகோ, அமெரிக்கா, கோஸ்டா ரிக்கா

ஆப்பிரிக்கா

5 அணிகள் பங்கேற்கின்றன.

கேம்ரூன், கானா, செனகல், துனிசியா, மொராக்கோ.

ஆசியா

6 அணிகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் நாடு என்பதால் கத்தார் நேரடியாகத் தகுதி பெற்றது.

கத்தார், ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா, ஜப்பான், ஈரான், தென் கொரியா. 


2022 கால்பந்து உலகக் கோப்பை

குரூப் ஏ

கத்தார், ஈகுவடார், செனகல், நெதர்லாந்து

குரூப் பி

இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ்

குரூப் சி

ஆர்ஜெண்டினா, சவுதி அரேபியா, மெக்சிகோ, போலந்து

குரூப் டி

பிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க், துனிசியா

குரூப் இ

ஸ்பெயின், கோஸ்டா ரிக்கா, ஜெர்மனி, ஜப்பான்

குரூப் எஃப்

பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோசியா

குரூப் ஜி

பிரேசில், செர்பியா, ஸ்விட்சர்லாந்து, கேம்ரூன்

குரூப் ஹெச்

போர்ச்சுகல், கானா, உருகுவே, தென் கொரியா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com