கால்பந்து உலகக் கோப்பை குறித்து ஆர்வமாக இருக்கும் கேரள ரசிகர்களுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளது ஃபிஃபா அமைப்பு.
2022 கால்பந்து போட்டி கத்தாரில் நவம்பர் 20 முதல் டிசம்பர் 18 வரை நடைபெறுகிறது. தோஹாவைச் சுற்றியுள்ள 8 மைதானங்களில் 64 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 2022 கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் 32 அணிகள் பங்கேற்கின்றன. நவம்பர் 20 அன்று தொடக்க ஆட்டத்தில் கத்தார் - ஈகுவடார் அணிகள் மோதுகின்றன.
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ஃபிஃபா சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. ஃபிஃபா 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2018-ல் ரஷியாவில் முதல்முறையாக நடைபெற்றது. தரவரிசையில் 7-வது இடத்தில் இருந்த பிரான்ஸ் அணி உலகக் கோப்பையை வென்றது. குரோஷியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது. 2026-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பை அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா நாடுகள் பெற்றுள்ளன. இப்போட்டியில் 48 நாடுகள் பங்கேற்கின்றன.
இந்நிலையில் கேரளாவில் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். கோழிக்கோட்டில் உள்ள ஆற்றில் நெய்மர், ரொனால்டோ, மெஸ்ஸியின் கட்அவுட்களை அவர்களுடைய ரசிகர்கள் வைத்துள்ளார்கள். இதன் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு கேரள ரசிகர்களின் கால்பந்து ஆர்வத்தைப் பாராட்டியுள்ளது ஃபிஃபா அமைப்பு. இதற்கு நன்றி தெரிவித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ட்விட்டரில் கூறியதாவது: கேரளாவும் கேரள மக்களும் எப்போதும் கால்பந்தை விரும்புவார்கள். கத்தார் உலகக் கோப்பை விரைவில் தொடங்குவதால் தங்களுடைய ஆர்வத்தை முழு அளவில் வெளிப்படுத்தி வருகிறார்கள். கேரள ரசிகர்களின் கால்பந்து மீதான ஆர்வத்தை அங்கீகரித்த ஃபிஃபாவுக்கு நன்றி எனக் கூறியுள்ளார்.