மேற்கு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் தோற்றதன் மூலம் டி20 ஆட்டத்தில் முதல்முறையாக உள்ளூர் அணியிடம் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது.
மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.
மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தை 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. 2-வது பயிற்சி ஆட்டம் பெர்த்தில் இன்று நடைபெற்றது. 2-வது பயிற்சி ஆட்டத்தில் கே.எல். ராகுல் கேப்டனாகச் செயல்பட்டார். ரோஹித் சர்மா, கோலி, சூர்யகுமார் யாதவ், சஹால் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் அஸ்வின் இடம்பெற்றார்.
முதலில் பேட்டிங் செய்த மேற்கு ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. நிக் ஹாப்சன் அதிகபட்சமாக 64 ரன்கள் எடுத்தார். அஸ்வின் சிறப்பாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முக்கியப் பேட்டர்கள் இல்லாமல் விளையாடிய இந்திய அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. கே.எல். ராகுல் அதிகபட்சமாக 74 ரன்கள் எடுத்தார்.
இந்தத் தோல்வியின் மூலம் டி20 ஆட்டத்தில் முதல்முறையாக உள்ளூர் அணியிடம் இந்திய அணி தோற்றுள்ளது. இதற்கு முன்பு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 2003 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பு குவாஸுலு நடால் அணிக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது.