தென்னாப்பிரிக்க பேட்டர் ரூசோவ், அடுத்தடுத்த ஆட்டங்களில் சதங்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.
சிட்னியில் தென்னாப்பிரிக்கா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த தெ.ஆ. அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. நடுவரிசை பேட்டர் ரூசோவ் 56 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் எடுத்து அசத்தினார். குயிண்டன் டி காக் 38 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார்.
கடந்த நான்கு ஆட்டங்களில் இரு முறை அடுத்தடுத்து டக் அவுட் ஆன ரூசோவ், கடந்த இரு ஆட்டங்களிலும் சதமடித்துள்ளார். இந்தூரில் இந்தியாவுக்கு எதிராக சதமடித்த ரூசோவ், அடுத்து பேட்டிங் செய்த சர்வதேச ஆட்டத்திலும் சதமடித்து அசத்தியுள்ளார். இதன்மூலம் முழு உறுப்பினர்களாக உள்ள நாடுகளைச் சேர்ந்த வீரர்களில் அடுத்தடுத்த டி20 ஆட்டங்களில் சதங்களை அடித்த முதல் வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார்.
2022-ல் 6 ஆண்டுகளுக்குப் பிறகு தெ.ஆ. அணியில் மீண்டும் இணைந்த ரூசோவ், இந்த ஆண்டு விளையாடிய டி20 ஆட்டங்களில் இரு சதங்களும் ஒருமுறை ஆட்டமிழக்காமல் 96 ரன்களும் எடுத்துள்ளார்.