கடைசி ஓவருக்குப் பதிலாக 18-வது ஓவரில் அஸ்வின் பந்துவீசியது குறித்து விளக்கம் அளித்துள்ளார் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா.
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பெர்த் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்னாப்பிரிக்க அணி. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. சூர்யகுமார் யாதவ் 68 ரன்கள் எடுத்தார். என்கிடி 4 விக்கெட்டுகளும் பார்னெல் 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். தென்னாப்பிரிக்க அணி, 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மார்க்ரம் 52 ரன்களும் மில்லர் 59 ரன்களும் எடுத்தார்கள்.
ஆட்டத்தின் சூழல் காரணமாக 20-வது ஓவரை அஸ்வின் வீசுவார் என எதிர்பார்த்த நிலையில் 18-வது ஓவரை வீசினார். அந்த ஓவரில் 2 சிக்ஸர்கள் உள்பட 1 விக்கெட்டுடன் 13 ரன்கள் கொடுத்தார்.
இந்நிலையில் இதுபற்றி இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:
கடைசி ஓவரை ஸ்பின்னர்கள் வீசியபோது என்ன நடந்தது என்று பார்த்துள்ளேன். எனவே கடைசி ஓவருக்கு முன்பு அஸ்வினின் ஓவர்களை முடிக்க எண்ணினேன். வேகப்பந்து வீச்சாளர்கள் அவர்களுக்கு ஏற்றாற் போல சரியான ஓவர்களை வீச வேண்டும். புதிய பேட்டர் (ஸ்டப்ஸ்) வந்ததால் அப்போது அஸ்வின் பந்து வீசுவது சரியாக இருக்கும் என எண்ணினேன். ஆனால் சில சமயங்களில் இது போல நடந்துவிடும். மில்லர் அற்புதமான ஷாட்களை அடித்தார் என்றார்.