குஜராத் டைட்டன்ஸ் அணி பதிவிட்ட ட்வீட்டால் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் அணியிலிருந்து விடைபெறுகிறா என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் புதிதாக இரண்டு அணிகள் களமிறங்கின. அதில், குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஒன்று. அந்த அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டார். ஐபிஎல் சீசனின் ஆரம்பம் முதலே குஜராத் அணி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதியில் கோப்பையையும் கைப்பற்றியது. அறிமுக சீசனிலேயே அந்த அணி கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது.
குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரராக ஷுப்மன் கில் விளையாடி வந்தார். இந்நிலையில், இன்று குஜாரத் டைட்டன்ஸ் அணி வெளியிட்டுள்ள ட்வீட் பதிவு ஒன்று ஷுப்மன் கில் அடுத்து வரும் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடுவாரா என்ற சந்தேகத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பதிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் கூறியிருப்பதாவது: “ நீங்கள் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் பயணித்தது நினைத்துப் பார்ப்பதற்கு சிறப்பான தருணம். உங்களது அடுத்த பயணத்திற்கு எங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.” எனப் பதிவிட்டுள்ளது.
இருப்பினும், ஷுப்மன் கில் குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து விலகுகிறாரா என்பது குறித்த அதிகாரபூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.