இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் கலந்து கொள்வதற்கான நெதர்லாந்து அணி செப்டம்பர் பாதியில் இந்தியாவுக்கு வரவுள்ளது.
50 ஓவர் உலகக் கோப்பை தொடர் வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விளையாடுவதற்காக நெதர்லாந்து அணி உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாகவே இந்தியாவில் முகாமிட்டு பயிற்சியில் ஈடுபட உள்ளனர். அவர்கள் பெங்களூருவில் தங்கி பயிற்சி பெற உள்ளனர். உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடன் நெதர்லாந்து இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடவுள்ளது.
இது குறித்து நெதர்லாந்து அணியின் பயிற்சியாளர் ரியான் குக் கூறியதாவது: எங்களால் எந்த அளவுக்கு கடினமாக தயாராக முடியுமோ அந்த அளவுக்கு தயாராகி வருகிறோம். உலகக் கோப்பை தொடரின் முக்கியப் போட்டிகளுக்கு முன்னதாக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடவுள்ளோம். பயிற்சி ஆட்டங்கள் உலகக் கோப்பையில் நாங்கள் சிறப்பாக செயல்பட உதவும் என நம்புகிறோம். உலகக் கோப்பை தொடரில் நுழைந்தவுடன், அணியில் ஒவ்வொருவரும் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற ஊக்கம் பெற்றுள்ளார்கள் என்றார்.
கடந்த ஜூலை மாதம் உலகக் கோப்பைக்கு நெதர்லாந்து அணி தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.