தொழில்முறை விளையாட்டு வீரர் ஏமாற்றங்களில் இருந்து மீண்டு அடுத்துள்ள சவால்களை நோக்கிப் பயணிக்க பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் ஏற்பட்ட அதிர்ச்சித் தோல்விக்குப் பிறகு இந்திய வீரர்கள் பலரும் 5 வாரங்களுக்கு கிரிக்கெட் விளையாடாமல் ஓய்வில் இருந்தனர். உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்ற கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்களே இடைப்பட்ட நாள்களில் இந்திய அணியில் விளையாடினர். இந்த நிலையில், 5 வார இடைவெளிக்குப் பிறகு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் மீண்டும் அணியுடன் இணைந்துள்ளனர்.
இந்த நிலையில், தொழில்முறை விளையாட்டு வீரர் ஏமாற்றங்களில் இருந்து மீண்டு அடுத்துள்ள சவால்களை நோக்கிப் பயணிக்க பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: உலகக் கோப்பையில் ஏற்பட்டத் தோல்வி ஏமாற்றமளிக்கிறது. இருப்பினும், சர்வதேசப் போட்டிகளில் தோல்விகளில் இருந்து விலகி அடுத்துள்ள முக்கியத் தொடரை நோக்கி நகர்ந்து செல்ல ஒருவர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். நீங்கள் தோல்வியை நினைத்துக் கொண்டே இருப்பதற்கு நேரமில்லை. அடுத்தடுத்த முக்கியமான தொடர்களை நோக்கி நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். உண்மையில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள் என்றார்.