பிசிசிஐ தேர்வுக்குழுத் தலைவர் சேதன் சர்மா ராஜிநாமா!

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவர் சேதன் சர்மா, தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிசிசிஐ தேர்வுக்குழுத் தலைவர் சேதன் சர்மா ராஜிநாமா!
Published on
Updated on
1 min read

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவர் சேதன் சர்மா, தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தனியார் தொலைக்காட்சியின் ஸ்டிங் ஆபரேஷனில் சேதன் சர்மா மாட்டிக் கொண்டுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் விளைவாக இந்நிலை உருவாகியுள்ளது. 

இந்திய ஆடவர் கிரிக்கெட்டின் தேர்வுக்குழுத் தலைவராக முன்னாள் வீரர் சேதன் சர்மா கடந்த மாதம் மீண்டும் தேர்வானார். கடந்த வருடம் நடைபெற்ற ஆசியக் கோப்பை, டி20 உலகக் கோப்பை என இரண்டிலும் இந்திய அணி தோல்வியடைந்தது. டி20 உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறியது. இதனால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து புதிய தேர்வுக்குழுவை நியமிப்பதற்கான விளம்பரத்தை வெளியிட்டது பிசிசிஐ. இதனால் தேர்வுக்குழுத் தலைவராக உள்ள சேதன் சர்மா மற்றும் அவருடைய குழுவினரின் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததாக அறியப்பட்டது. எனினும் தேர்வுக்குழுத் தலைவரை நியமிப்பதற்காக உருவாக்கப்பட்ட தேர்வுக்குழு, சேதன் சர்மாவையே மீண்டும் தேர்வு செய்தது. சேதன் சர்மா, ஷிவ் சுந்தர் தாஸ், சுப்ரோடோ பானர்ஜி, சலில் அன்கோலா, ஸ்ரீதரன் ஷரத் ஆகியோர் தேர்வுக்குழுவில் இடம்பெற்றார்கள்.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் சேதன் சர்மா பல விஷயங்களைக் கூறியிருப்பது சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. விராட் கோலி, ரோஹித் சர்மா, பாண்டியா, இந்திய அணி வீரர்களின் உடற்தகுதி என பல முக்கிய நபர்கள், முக்கிய விஷயங்களைப் பற்றி அவர் பேசியதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து நெருக்கடிக்கு ஆளான சேதன் சர்மா, தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளதாகவும் அவருடைய ராஜிநாமா கடிதத்தை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஏற்றுக்கொண்டதாகவும் இன்று தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com