டபிள்யூபிஎல் விளம்பரதாரர்: பிசிசிஐ அறிவிப்பு

டபிள்யூபிஎல் போட்டியின் விளம்பரதாரர் குறித்த அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
டபிள்யூபிஎல் விளம்பரதாரர்: பிசிசிஐ அறிவிப்பு

டபிள்யூபிஎல் போட்டியின் விளம்பரதாரர் குறித்த அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

டபிள்யூபிஎல் போட்டிக்காக வீராங்கனைகளைத் தேர்வு செய்யும் ஏலம் மும்பையில் நடைபெற்றது. 30 வெளிநாட்டு வீராங்கனைகள் உள்பட மொத்தமாக 87 பேர் ஏலத்தில் தேர்வானார்கள். டபிள்யூபிஎல் போட்டி மார்ச் 4 முதல் 26 வரை மும்பையில் உள்ள இரு மைதானங்களில் நடைபெறவுள்ளது. 22 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 

டபிள்யூபிஎல் போட்டியில் ஆமதாபாத், மும்பை, பெங்களூரு, தில்லி, லக்னெள ஆகிய நகரங்களை முன்னிலைப்படுத்தும் அணிகள் போட்டியிடுகின்றன. குஜராத் ஜெயண்ட்ஸ் (ஆமதாபாத்) அணியை அதானி நிறுவனம் ரூ. 1,289 கோடிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியை இந்தியாவின் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ரூ. 912.99 கோடிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ராயல் சேலஞ்சர்ஸ் நிறுவனம் ரூ. 901 கோடிக்கும் தில்லி கேபிடல்ஸ் அணியை ஜேஎஸ்டபிள்யூ ஜிஎம்ஆர் நிறுவனம் ரூ. 810 கோடிக்கும் உ.பி. வாரியஸ் (லக்னெள) அணியை கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் ரூ. 757 கோடிக்கும் பெற்றுள்ளன. 

டபிள்யூபிஎல் ஏலத்தில் இந்திய வீராங்கனை மந்தனா அதிகபட்ச ஏலத்தொகைக்குத் தேர்வானார். ரூ. 3.4 கோடிக்கு ஆர்சிபி அணி அவரைத் தேர்வு செய்தது. 

இந்நிலையில் டபிள்யூபிஎல் போட்டியின் விளம்பரதாரராக டாடா நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. டபிள்யூபிஎல் போட்டியின் பெயருக்கான விளம்பரதாரராக டாடா நிறுவனத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதன்மூலம் மகளிர் கிரிக்கெட்டை அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு செல்ல முடியும் என நம்புகிறேன் என ட்விட்டரில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார். 

டபிள்யூபிஎல் போட்டிக்கான ஊடக ஒளிபரப்பு உரிமையை 5 வருடத்துக்கு ரூ. 951 கோடிக்குப் பெற்றுள்ளது வியாகாம் 18 நிறுவனம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com