பாஸ் டி லீட்டின் அசத்தலான சதத்தால் ஸ்காட்லாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக் கோப்பைக்கு நெதர்லாந்து தகுதி பெற்றுள்ளது.
50 ஓவர் உலகக் கோப்பை இந்தியாவில் வருகிற அக்டோபர் முதல் தொடங்க உள்ளது. ஏற்கனவே 8 அணிகள் தகுதி பெற்ற நிலையில் மீதமுள்ள இரண்டு இடங்களுக்கான தகுதிச் சுற்று ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகிறது. இந்த தகுதிச் சுற்றில் இலங்கை அணி முதல் அணியாக தகுதி பெற்ற நிலையில், உலகக் கோப்பைக்குத் தகுதி பெறும் மற்றொரு அணிக்கு கடும் போட்டி நிலவியது. இந்த நிலையில், இன்று (ஜூலை 6) நடைபெற்ற போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியதன் மூலம் இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பைக்கு நெதர்லாந்து தகுதி பெற்றது.
முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பிரண்டன் மெக்முல்லன் 110 பந்துகளில் 106 ரன்கள் குவித்தார். அவரைத் தொடர்ந்து கேப்டன் பெரிங்டன் அதிகபட்சமாக 64 ரன்கள் எடுத்தார். நெதர்லாந்து சார்பில் சிறப்பாக பந்துவீசிய பாஸ் டி லீட் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
அதனைத் தொடர்ந்து, 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது நெதர்லாந்து. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தனர். முதல் விக்கெட்டுக்கு அந்த இணை 65 ரன்கள் சேர்த்தது. அதன்பின் பாஸ் டி லீட்ஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக விளையாடிய அவர் பவுண்டரிகளை பறக்கவிட்டார். அவர் 92 பந்துகளில் 123 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட பாஸ் டி லீட் பேட்டிங்கிலும் அதிரடியாக சதமடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்ட பாஸ் டி லீட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிக்க: சந்திராயன் 3 ஜூலை 14-ல் விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ
இறுதியில், 42.5 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது நெதர்லாந்து. இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பை போட்டிக்கு 5-வது முறையாக நெதர்லாந்து தகுதி பெற்றுள்ளது.
முன்னதாக, 1996, 2003, 2007 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகளுக்கு நெதர்லாந்து தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.