உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியாவின் விக்கெட் கீப்பராக கே.எல். ராகுலைத் தேர்வு செய்யவேண்டும் என்று முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டைப் பரபரப்பான முறையில் நியூசிலாந்து அணி வென்றது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டை டிரா செய்து டெஸ்ட் தொடரை 2-1 என வென்றது இந்தியா. இலங்கையின் தோல்வி காரணமாகப் புள்ளிகளின் அடிப்படையில் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதியடைந்தது.
ஜூன் 7-11 தேதிகளில் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன.
இந்நிலையில் இறுதிச்சுற்றில் விளையாடவுள்ள இந்திய அணி பற்றி முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறியதாவது:
கே,.எல். ராகுலை விக்கெட் கீப்பராகக் கருதலாம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றில் கே.எல். ராகுல் 5 அல்லது 6-ம் நிலை வீரராகக் களமிறங்கினால் நம்முடைய பேட்டிங் பலமாக மாறிவிடும். ஏனெனில் இங்கிலாந்தில் கடந்தமுறை அவர் சிறப்பாக விளையாடினார். லார்ட்ஸ் டெஸ்டில் சதமடித்தார். எனவே இந்திய அணிக்கான வீரர்களைத் தேர்வு செய்யும்போது கே.எல். ராகுலையும் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள் என்றார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரு டெஸ்டுகளில் கே.எல். ராகுல் விளையாடினார். அதன்பிறகு அவருக்குப் பதிலாக ஷுப்மன் கில் அணியில் இடம்பிடித்தார். துணை கேப்டன் பதவியும் கே.எல். ராகுலிடமிருந்து பறிக்கப்பட்டது.