2023, 2024 என இரு ஆண்டுகளுக்கான ஆசியக் கோப்பை குறித்து சில தகவல்களை வெளியிட்டுள்ளது ஆசிய கிரிக்கெட் கவுன்சில். இந்த வருடம் இந்தியாவில் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டி நடைபெறுகிறது. இதனால் 2023 ஆசியக் கோப்பைப் போட்டியும் செப்டம்பரில் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் நடைபெறவுள்ளது. ஆறு அணிகள் கலந்துகொள்ளும் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. இந்தப் போட்டியில் மொத்தம் 13 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
2018, 2022 ஆசியக் கோப்பைப் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகம் நடத்தியது. 2023 ஆசியக் கோப்பை ஒருநாள் போட்டி பாகிஸ்தானில் நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது. எனினும் இந்தியா பாகிஸ்தானுக்குச் செல்ல மறுப்பு தெரிவித்துள்ளதால் போட்டி நடத்தும் நாடு குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
ஏற்கனவே 5 அணிகள் தேர்வான் நிலையில் 6வது அணிக்கான போட்டியில் நேபாளம், யுஏஇ அணிகள் மோதின. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நேபாளம் அணி பந்து வீச்சினை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செயத் யுஏஇ அணி 33.1 ஓவர்களில் 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ஆசிப் கான் 46 ரன்கள் எடுத்தார். நேபாள் அணி சார்பாக லலித் ராஜ்பன்ஸி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சந்தீப் லமிச்சனே, கரன் கேசி தலா 2விக்கெட்டுகளை எடுத்தனர்.
அடுத்து ஆடிய நேபாளம் அணி 30.3 ஓவர்களில் 118/3 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நேபாள் அணியில் குல்சன் ஜா 67 ரன்களும், பீம் ஷார்கி 36 ரன்களு எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர். இந்த வெற்றியின் மூலம் நேபாள் அணி முதல்முறையாக ஆசியக் கோப்பைக்கு தேர்வாகியுள்ளது.
குரூப் ஏ பிரிவில் : இந்தியா, பாகிஸ்தான், நேபாளம்.
குரூப் பி பிரிவில்: இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான்.