ஜப்பான் மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் தோல்வியடைந்து வெளியேறினார் இந்திய வீரர் பிரணாய்.
ஜப்பான் மாஸ்டர்ஸ் சூப்பர் 500 பாட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் ஹெச்.எஸ். பிரணாய், சீன தைபேயின் சௌ தியென் சென்னுடன் வியாழக்கிழமை நடந்த இரண்டாவது சுற்று ஆட்டத்தில் தோல்வியடைந்து வெளியேறினார்.
முன்னதாக ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பிரணாய், முதுகில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு இந்தப் போட்டிக்கு திரும்பினார். உலகின் 12ம் நிலை வீரரான தியென் சென்னுடனான 73 நிமிட போட்டியில் 21-19, 16-21, 19-21 என்ற கணக்கில் தோற்றார்.
உலகத் தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் பிரணாய் முதல் சுற்றில் நிதானமாக விளையாடி 4-0 என முன்னிலை பெற்றார். மேலும் இடைவேளையின் போதும் 11-8 என முன்னிலையில் இருந்தார்.
இருப்பினும், சென் பிரணாய்க்கு நெருக்கமாக வர கடுமையாக முயற்சி செய்தார். அடுத்த ஆட்டத்தில் 5-0 என சென் முன்னிலை பெற்றார்.
அதனைத் தொடர்ந்து பிரணாய் போராடி 10-10 என்ற கணக்கில் புள்ளிகளை சமன் செய்தாலும், சென் விரைவாக நான்கு புள்ளிகளை கூடுதலாக எடுத்து இடைவெளியை உருவாக்கினார், அதை பிரணாயால் முறியடிக்க முடியவில்லை.
சீன தைபே வீரர் சென் ஒரு கட்டத்தில் 12-4 என முன்னிலை வகித்தார். இதையடுத்து மிக நிதானமாக விளையாடிய பிரணாய் புள்ளிகளை சீராக உயர்த்தி 19-19 என்று சமநிலைக்கு வந்தார்.
இருந்தபோதிலும், சென் கூடுதலாக இரண்டு புள்ளிகளைக் கைப்பற்றி 21-19 என்ற கணக்கில் இந்திய வீரர் பிரணாயை வீழ்த்தினார்.