மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரரான மார்லான் சாமுவேல்ஸுக்கு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் அடுத்த 6 ஆண்டுகளுக்கு விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற டி10 லீக் போட்டியில் ஊழலுக்கு எதிரான ஐசிசியின் விதிமுறைகளை மீறியதாக சாமுவேல்ஸ் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அவர் ஐசிசி விதிமுறைகளை மீறி பரிசுப்பொருள் அல்லது ஏதேனும் பிற ஆதாயமோ பெற்றதது நிரூபணமாகியுள்ளது.
இதன்மூலம் அவருக்கு 750 அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஆதாயம் கிடைத்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணையின்போது சாமுவேல்ஸ் ஒத்துழைக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
அந்த குற்றச்சாட்டு நிரூபணமானதன் அடிப்படையில் அவருக்கு தற்போது 6 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, கடந்த 2008 ஆம் ஆண்டு சாமுவேல்ஸுக்கு இரண்டு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.