இந்திய அணியின் தோல்விக்கு மைதானத்தில் பனிப்பொழிவு அதிகம் இருந்ததுதான் காரணமென இந்திய அணியின் துணைக் கேப்டனும், தொடக்க ஆட்டக்காரருமான ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி நேற்று முன் தினம் (நவம்பர் 28) நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 222 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை குவித்திருந்தபோதிலும் தோல்வியைத் தழுவினர். ஆட்டத்தின் இறுதி 5 ஓவர்களில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் 80 ரன்களைக் கொடுத்தனர். பிரசித் கிருஷ்ணா வீசிய கடைசி ஓவரில் மட்டும் ஆஸ்திரேலிய அணிக்கு 23 ரன்கள் கிடைத்தது.
இந்த நிலையில், இந்திய அணியின் தோல்விக்கு மைதானத்தில் பனிப்பொழிவு அதிகம் இருந்ததுதான் காரணமென இந்திய அணியின் துணைக் கேப்டனும், தொடக்க ஆட்டக்காரருமான ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இந்திய அணியின் பந்துவீச்சு காரணமில்லை என நினைக்கிறேன். இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் கிட்டத்தட்ட ஈரமான பந்தில்தான் பந்துவீசினார்கள். அந்த சூழலில் பந்துவீசுவது மிகவும் கடினம். இது போன்ற சூழலில் ஓவருக்கு 12,13 அல்லது 14 ரன்களைக் கூட எடுக்கலாம். முதல் டி20 போட்டியில் நாங்கள் 200 ரன்களுக்கும் அதிகமான இலக்கை துரத்திப் பிடித்தோம். அதனால், பந்துவீச்சு என்பது தோல்விக்கு காரணமென்று நான் நினைக்கவில்லை. மைதானத்தில் உள்ள பனிப்பொழிவு அவர்கள் சிறப்பாக பந்துவீசுவதை சிரமமாக்கியது. மேக்ஸ்வெல் சிறப்பாக விளையாடினார் என்றார்.