இந்தியாவுக்கு மூன்றாவது உலகக் கோப்பையை வென்று கொடுப்பதற்கு ரோஹித் சர்மா சிறந்த கேப்டனாக இருப்பார் என நம்புவதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இந்த உலகக் கோப்பைத் தொடரை இந்திய அணி சிறப்பாக தொடங்கியுள்ளது. இதுவரை விளையாடியுள்ள மூன்று போட்டிகளிலுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியது இந்திய அணி. 2-வது போட்டியில் ஆப்கானிஸ்தானை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், 3-வது போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் வீழ்த்தி தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்தது. இந்திய அணி தனது அடுத்தப் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.
இதையும் படிக்க: சிறந்த தொடக்கத்தை நாங்கள் வீணாக்கி விட்டோம்: பதும் நிசங்கா
இந்த நிலையில், இந்தியாவுக்கு மூன்றாவது உலகக் கோப்பையை வென்று கொடுப்பதற்கு ரோஹித் சர்மா சிறந்த கேப்டனாக இருப்பார் என நம்புவதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரோஹித் சர்மா மிகவும் அமைதியானவர். அவர் எதைச் செய்தாலும் அதில் பெரிதாக பதற்றமடைய மாட்டார். அவர் பேட்டிங் செய்யும்போதும் அவரிடம் இந்த குணங்களைக் காணலாம். அவர் மைதானத்தில் விளையாடும்போதும் மற்றும் மைதானத்துக்கு வெளியேயேயும் அவரது இந்த குணத்தை நீங்கள் காணலாம். இந்தியாவுக்கு உலகக் கோப்பையை வென்று கொடுப்பதற்கான பொறுப்பு சரியான நபரிடமே உள்ளது. இந்திய அணியை அவர் சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.
இந்தியா கடைசியாக கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றியது. அதனால் இந்தியாவுக்கு அதிகப்படியான அழுத்தம் கண்டிப்பாக இருக்கும். ஆனால், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அதனை திறம்பட கையாளும் என நான் நினைக்கிறேன். இந்திய அணி மற்ற அணிகளுக்கு சவாலாக இருக்கப் போகிறது என்பதை நான் ஆரம்பத்திலிருந்து கூறிக் கொண்டிருக்கிறேன். பந்துவீச்சு, பேட்டிங் என அனைத்துத் துறைகளிலும் இந்திய அணி சிறப்பாக உள்ளது. அவர்களை தோற்கடிப்பது மிகவும் கடினம் என்றார்.