இலங்கை அணியில் மாற்று வீரர்களாக மூத்த வீரர்கள் இருவர் இணைய உள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உலகக் கோப்பைத் தொடரில் இலங்கை அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. புள்ளிப்பட்டியலிலும் கடைசி இடத்தில் உள்ளது. இந்த நிலையில், இலங்கை அணியில் மாற்று வீரர்களாக மூத்த வீரர்கள் இருவர் இணைய உள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக எக்ஸ் வலைத்தளப் பதிவில் இலங்கை கிரிக்கெட் வாரியம் தரப்பில் பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்தப் பதிவில் கூறியிருப்பதாவது: ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் துஷ்மந்தா சமீரா இலங்கை அணியுடன் மாற்று வீரர்களாக இந்தியாவில் உள்ள உலகக் கோப்பைக்கான இலங்கை அணியுடன் இணைய உள்ளார்கள் என்பதை நாங்கள் அறிவிக்க விரும்புகிறோம். இவர்கள் இருவரும் இலங்கை அணியுடன் நாளை இணைவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
இலங்கை அணிக்காக 221 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஏஞ்சலோ மேத்யூஸ் 5,865 ரன்கள் குவித்துள்ளார். இலங்கை அணிக்காக 120 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றியுள்ளார். அதேபோல, வேகப் பந்துவீச்சாளர் துஷ்மந்தா சமீரா 44 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 50 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
இதையும் படிக்க: பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் குவிப்போம்: பாட் கம்மின்ஸ்
நாளை மறுநாள் (அக்டோபர் 21) லக்னௌவில் நடைபெறும் போட்டியில் நெதர்லாந்தை இலங்கை அணி எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.