பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 ஆட்டத்தில் கே.எல்.ராகுல் மற்றும் விராட் கோலியின் அசத்தலான சதங்களால் இந்தியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 356 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சூப்பர் 4 ஆட்டம் நேற்று நடைபெற்றது. மழையின் காரணத்தால் நேற்றையப் போட்டி இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது நிறுத்தப்பட்டது. நேற்றைய ஆட்டத்தில் 24.1 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழை நிற்காததால் ஆட்டம் கூடுதல் நாளான இன்று நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க: 77வது சதமடித்த விராட் கோலி!
இந்திய அணியின் விராட் கோலி 8 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில், இன்று (செப்டம்பர் 11) கூடுதல் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கியது முதலே விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த இணை பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு பெரும் தலைவலியாக அமைந்தது. இருவரும் அவ்வப்போது பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை பறக்கவிட இந்திய அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதம் விளாசி அசத்தினர். காயத்திலிருந்து மீண்டு அணிக்குத் திரும்பிய கே.எல்.ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக விளையாடிய அவர் 106 பந்துகளில் 111 ரன்கள் குவித்தார். அதில் 12 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அதிரடியாக விளையாடிய விராட் கோலி 94 பந்துகளில் 122 ரன்கள் குவித்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். சதம் விளாசி அசத்திய இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 356 ரன்கள் குவித்தது.
இதையும் படிக்க: ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!
பாகிஸ்தான் தரப்பில் ஷகின் அஃப்ரிடி மற்றும் ஷதாப் கான் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் களமிறங்குகிறது.