பிளேயிங் லெவனில் இல்லை என்பதற்காக குறைவாக உணரக் கூடாது என இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று (செப்டம்பர் 22) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்திய அணியின் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவரது இந்த சிறந்த பந்துவீச்சு ஆஸ்திரேலிய அணியை 276 ரன்களுக்குள் கட்டுப்படுத்த உதவியாக இருந்தது.
இந்த நிலையில், பிளேயிங் லெவனில் இல்லை என்பதற்காக குறைவாக உணரக் கூடாது என முகமது ஷமி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நீங்கள் பிளேயிங் லெவனில் இல்லை என்பதற்காக குறைவாக உணரக் கூடாது. ஏனென்றால், அணி வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது. இது அணியினுடைய திட்டம். அந்த திட்டத்துக்கு ஏற்றவாறு நாம் செயல்படுவது மிகவும் முக்கியம். எப்போதும் ஒருவரால் பிளேயிங் லெவனில் இருந்துகொண்டே இருக்க முடியாது. அணியில் இடம்பெறுவது என்பது ஆட்டத்தின் தேவையை பொறுத்தே அமையும். நீங்கள் நன்றாக விளையாடுகிறீர்கள் இருந்தும் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லையென்றால், அணியில் விளையாடுபவர்களுக்கு நீங்கள் ஆதரவாக இருக்க வேண்டும். நான் குறைவாக உணர அர்த்தமே இல்லை. அணியின் தேவைக்கேற்ப விளையாட நான் தயாராக இருக்கிறேன் என்றார்.