தனது வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘800’ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக முன்னாள் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் மும்பையில் மழையையும் பொருட்படுத்தாமல் கிரிக்கெட் விளையாடியுள்ளார்.
இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்களை வீழ்த்தி சாதனை புரிந்ததால் அவரின் வாழ்க்கை வரலாறு ‘800’ என்கிற பெயரில் திரைப்படமாக உருவாகியுள்ளது.
இதையும் படிக்க: ஆசியப் போட்டி: இறுதிச் சுற்றில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!
800 படத்தின் நாயகனாக ஆஸ்கர் விருது பெற்ற ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தில் நடித்த மதூர் மிட்டல் தேர்வு செய்யப்பட்டார். மேலும், இப்படத்தில் மஹிமா நம்பியார், நரேன், நாசர், வேல ராம மூர்த்தி, ரித்விகா, அருள்தாஸ், ஹரி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை எம்.எஸ். ஸ்ரீபதி இயக்கியுள்ளார். தமிழில் எடுக்கப்பட்டு தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலத்தில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், தனது வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘800’ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக முன்னாள் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் மும்பையில் மழையையும் பொருட்படுத்தாமல் கிரிக்கெட் விளையாடியுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதையும் படிக்க: உலகக் கோப்பை போட்டியிலிருந்து ஹசரங்கா விலகல்!
இது தொடர்பாக முத்தையா முரளிதரன் பேசியதாவது: மழை பெய்த போதிலும் கிரிக்கெட் விளையாடியது மகிழ்ச்சியாக இருந்தது. 800 படம் தொடர்பாக எனக்கு நேர்மறையான விஷயங்கள் வந்தடைகின்றன. நான் பல நாடுகளுக்காக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளேன். ஆனால், எனது முன்னோர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். எனது மனைவி இந்தியாவைச் சேர்ந்தவர். 800 திரைப்படத்தை எதிர்நோக்கி பலரும் காத்திருக்கின்றனர். 800 ஒரு நல்ல படமாக இருக்கும் என நான் நினைக்கிறேன் என்றார்.
800 திரைப்படம் வருகிற அக்டோபர் 6 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.