எனக்கு பிரியாவிடை கொடுக்க ரசிகர்கள் வந்துள்ளனர் என்று நேற்றைய ஆட்டத்திற்கு பிறகு சென்னை கேப்டன் தோனி தெரிவித்தார்.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற நடப்பு ஐபிஎல் சீசனின் 33-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய சென்னை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் இந்த சீசனில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் சென்னை அணி முதலாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்த சீசனோடு சென்னை அணியின் கேப்டன் தோனி விடைபெறுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சென்னை அணியின் ஹோம் மைதானமான சென்னையை போலவே, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களிலும் சென்னைக்கு ஆதரவாக ரசிகர்கள் குவிந்து ஆரவாரம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக தோனி டாஸ் போட வரும்போது, பேட்டிங் செய்ய வரும்போது, பீல்டிங்கில் ஈடுபடும்போது தோனி, தோனி என்ற பெயர் மட்டுமே மைதானம் முழுவதும் கேட்கிறது.
இந்நிலையில், நேற்றைய போட்டி முடிந்த பிறகு தோனி பேசுகையில்,
“மைதானத்திற்கு அதிக எண்ணிக்கையில் திரண்டு வந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு தெரிந்து அடுத்தப் போட்டியில் இவர்கள் அனைவரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஜெர்ஸியில் வருவார்கள் என நினைக்கிறேன். இவர்கள் எனக்கு பிரியாவிடை கொடுக்க வந்துள்ளனர். கொல்கத்தா ரசிகர்களுக்கு நன்றி” என தோனி தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு பேசிய தோனி, எனது கிரிக்கெட் வாழ்வின் கடைசி அத்தியாயம் என்று குறிப்பிட்டிருந்தார்.