இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியின் அட்டவணை இன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2022 போட்டியை பாண்டியா தலைமையிலான குஜராத் அணி வென்றது. இந்நிலையில் ஐபிஎல் 2023 போட்டிக்கான அட்டவணை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என ஸ்டார் ஸ்போர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஐபிஎல் போட்டியில் ஒவ்வொரு அணியும் சொந்த மண்ணிலும் இதர நகரங்களிலும் விளையாடும் முறை இந்த ஆண்டு முதல் மீண்டும் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி 10 அணிகளும் பாதி ஆட்டங்களை சொந்த மண்ணிலும் (சிஎஸ்கே அணி சேப்பாக்கத்தில் விளையாடுவது போல) மீதி பாதி ஆட்டங்களை இதர நகரங்களிலும் விளையாடவுள்ளன.
இதனால் 2023 ஐபிஎல் போட்டியில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சிஎஸ்கே அணி சென்னையில் விளையாடவுள்ளது. சென்னையில் கடைசியாக விளையாடி ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவேன் என தோனியும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2023 போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பிரபல இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸை ரூ. 16.25 கோடிக்குத் தேர்வு செய்தது. ஐபிஎல் 2023 போட்டியை இணையத்தில் இலவசமாக ஒளிபரப்பவுள்ளதாக ஜியோ நிறுவனம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டியில் இந்த ஆண்டு முதல் இம்பாக்ட் வீரர் என்கிற மாற்று வீரருக்கு வாய்ப்பளிக்கும் புதிய விதிமுறை அமலுக்கு வரவுள்ளது.