ஆசிய விளையாட்டில் ஆடவர் கிரிக்கெட் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் நேபாளத்தை வீழ்த்திய இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்ற நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் இளம் ஆடவர் அணி களமிறங்கியுள்ளது.
தகுதி சுற்றில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறிய நேபாள அணியுடன், நேரடியாக காலிறுதியில் களமிறங்கும் இந்திய அணி இன்று மோதியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களை இந்திய அணி குவித்தது.
அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 100(49 பந்துகள்), ரிங்கு சிங் 37(15), ஷிவம் துபே 25, ருதுராஜ் 25 ரன்கள் எடுத்தனர்.
தொடர்ந்து களமிறங்கிய நேபாள அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக திபேந்திர சிங் 32, சுந்தீப் ஜோரா 29, குஷல் மல்லா 29 ரன்கள் எடுத்தனர்.
இந்திய அணி தரப்பில் ஆவேஷ் கான் 3, ரவி பிஸ்னோய் 3, அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன்மூலம் ஆசிய விளையாட்டில் களமிறங்கிய முதல் போட்டியிலேயே வெற்றி பெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.