பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் இன்று (ஏப்ரல் 18) தொடங்குகிறது.
நியூசிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி ராவல்பிண்டியில் இன்று தொடங்குகிறது. டி20 உலகக் கோப்பைக்கு முன்பு நடைபெறும் தொடர் என்பதால் இந்த டி20 தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடங்குவதற்கு முன்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேசியதாவது: 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடர் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக எங்களை தயார்படுத்திக் கொள்வதற்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வாய்ப்பு. உலகக் கோப்பைக்கு முன்பாக பாகிஸ்தான் அணி 12 போட்டிகளில் விளையாடவுள்ளது.
உலகக் கோப்பைக்காக எங்களைத் தீவிரமாக தயார் செய்து வருகிறோம். நியூசிலாந்து டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியே உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியாக இருக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதற்கிடையில் என்ன நடக்கும் என்பதை கூறுவது கடினம். உலகக் கோப்பைத் தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதத்துக்கும் மேலாக நாட்கள் உள்ளன என்றார்.
டி20 உலகக் கோப்பைத் தொடர் வருகிற ஜூன் 1 முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.