ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜோஸ் பட்லருக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டாம் மூடி புகழாரம் சூட்டியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவில் நேற்று முன் தினம் (ஏப்ரல் 16) நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஜோஸ் பட்லரின் அசத்தலான சதத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய ஜோஸ் பட்லர் 60 பந்துகளில் 107 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
இந்த நிலையில், ஜோஸ் பட்லரின் சதம் வீரர்கள் திறமையானவர்களாக மட்டுமல்லாது, கடைசி வரை களத்திலிருந்து ஆட்டத்தை முடித்துக் கொடுப்பவர்களாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதாக பட்லருக்கு டாம் மூடி புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஜோஸ் பட்லர் மிகச் சிறந்த வீரர். அவரால் ஆட்டத்தின் இறுதிவரை தாக்குப் பிடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடிந்ததிலிருந்து, அவர் மிகச் சிறந்த விளையாட்டு வீரர் என்பது தெரிகிறது. இன்றைய டி20 கிரிக்கெட் அல்லது எந்த ஒரு வடிவிலான கிரிக்கெட்டிலும் ஒருவர் மிகச்சிறந்த உடல்தகுதியுடன் இருப்பது மிகவும் முக்கியம். முந்தையப் போட்டியில் உடல்நலக் குறைவு காரணமாக விளையாடாமலிருந்த பட்லர், அடுத்தப் போட்டியில் ஆட்டத்தின் இறுதிவரை களத்திலிருந்து அணிக்கு வெற்றி பெற்றுத் தந்துள்ளார். அவர் உடலளவிலும், மனதளவிலும் மிகவும் வலிமையானவர் என்றார்.
கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ஜோஸ் பட்லர் எடுத்த சதம் நடப்பு ஐபிஎல் தொடரில் அவரது 2-வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது