டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குறித்து எந்த ஒரு விவாதமும் இருக்கக் கூடாது எனவும், சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அணியில் சேர்ப்பக்கப்பட வேண்டும் எனவும் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: மும்பை இந்தியன்ஸுக்கு எதிரானப் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டம் ஃபார்ம் என்பது தற்காலிகமானது, க்ளாஸ் என்பது நிரந்தரமானது என்பதற்கான ஆதாரம். டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுக்கான இடத்துக்காக எந்த ஒரு விவாதமும் இருக்கக் கூடாது. டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெற வேண்டும். ரோஹித் சர்மாவுக்குப் பிறகு இந்திய டி20 அணியின் கேப்டனாக அவர் உருவாக்கப்பட வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார்.
டி20 உலகக் கோப்பை வருகிற ஜூன் 1 முதல் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.