அனைத்து வடிவிலான போட்டிகளுக்குமான பாகிஸ்தான் அணியின் புதிய பயிற்சியாளர்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று (ஏப்ரல் 28) நியமித்துள்ளது.
பாகிஸ்தானின் டி20 மற்றும் ஒருநாள் அணிகளுக்கு தலைமைப் பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன் நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பி நியமிக்கப்பட்டுள்ளார். அனைத்து வடிவிலான போட்டிகளுக்கும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அஸார் மஹ்மூத் உதவிப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வி பேசியதாவது: மிகச் சிறந்த பயிற்சியாளர்களான கேரி கிறிஸ்டன் மற்றும் ஜேசன் கில்லெஸ்பி இருவரும் பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டதிலிருந்தே பாகிஸ்தான் அணிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பது தெரிந்திருக்கும். பாகிஸ்தான் அணிக்கு சிறந்த பயிற்சி கிடைக்க வேண்டும் என நினைத்தோம். அதன் காரணத்தினால் கேரி கிறிஸ்டன் மற்றும் ஜேசன் கில்லெஸ்பி இருவரையும் பயிற்சியாளராக தேர்ந்தெடுத்துள்ளோம் என்றார்.
பாகிஸ்தான் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான இந்த டி20 தொடரிலிருந்து கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக தனது பணிகளைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்படத் தவறியது. இதனால், பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர்கள், உதவிப் பணியாளர்கள் என ஒட்டுமொத்தமாக அனைவரையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பதவிலிருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.