மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று (பிப்ரவரி 9) நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 70 ரன்கள் குவித்தார். அவரைத் தொடர்ந்து அதிகபட்சமாக ஜோஷ் இங்லிஷ் 39 ரன்கள் எடுத்தார். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஆண்ட்ரே ரசல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அல்சாரி ஜோசப் 2 விக்கெட்டுகளையும், ஜேசன் ஹோல்டர் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்டு தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: 100வது சர்வதேச டி20யில் வார்னர் புதிய சாதனை!
214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மேற்கிந்தியத் தீவுகள் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் மேற்கிந்தியத் தீவுகளுக்கு அதிரடியான தொடக்கத்தைத் தந்தனர். அதிரடியாக விளையாடிய பிரண்டன் கிங் 53 ரன்கள் எடுத்தும் ஜான்சன் சார்லஸ் 42 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ஜேசன் ஹோல்டரைத் தவிர மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை. அதிரடியாக விளையாடிய ஜேசன் ஹோல்டர் 15 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் குவித்த மேற்கிந்தியத் தீவுகள் 11 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஆடம் ஸாம்பா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மார்கஸ் ஸ்டொய்னிஸ் 2 விக்கெட்டுகளையும், சீன் அப்பாட், மேக்ஸ்வெல், ஜேசன் பெஹ்ரண்டிராஃப் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.