இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் இன்று (பிப்ரவரி 15) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது.
இந்திய அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஷுப்மன் கில் 0 ரன்னிலும், ரஜத் படிதார் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து, ஜோடி சேர்ந்த கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா அபாரமாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடிய இருவரும் சதம் விளாசி அசத்தினர். ரோஹித் சர்மா 131 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 14 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
அறிமுகப் போட்டியில் களம் கண்ட சர்ஃபராஸ் கான் அதிரடியாக அரைசதம் எடுத்து அசத்தினார். இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக 62 ரன்களில் ரன் அவுட் ஆனார். இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். டாம் ஹார்ட்லி ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்கள் எடுத்துள்ளது. ரவீந்திர ஜடேஜா 110 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.