இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியிலிந்து காயம் காரணமாக கே.எல்.ராகுல் விலகியுள்ளதாகவும், தற்காலிக ஓய்விலிருந்த பும்ரா அணிக்கு மீண்டும் திரும்பவுள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு கே.எல்.ராகுல் காயம் காரணமாக இந்திய அணியில் இடம்பெறவில்லை. காயத்திலிருந்து குணமடைந்து வருகிறார் எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது இங்கிலாந்து எதிரான கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து கே.எல்.ராகுல் விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக பிசிசிஐ தரப்பில் தெரிவித்திருப்பதாவது: இங்கிலாந்துக்கு எதிராக தர்மசாலாவில் நடைபெறவுள்ள கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய அணியின் கே.எல்.ராகுல் விலகியுள்ளார். பிசிசிஐ-ன் மருத்துவக் குழு அவரது உடல் நலத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. வேலைப்பளு மேலாண்மை காரணமாக விடுப்பிலிருந்த இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி விவரம் (5-வது டெஸ்ட் போட்டிக்கு)
ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணைக் கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், துருவ் ஜுரல், கே.எஸ்.பரத், தேவ்தத் படிக்கல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார் மற்றும் ஆகாஷ் தீப்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற மார்ச் 7 ஆம் தேதி தர்மசாலாவில் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.