

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் தொடர்ச்சியாக ரன்கள் குவிக்கத் தவறி வரும் நிலையில், கடைசி டி20 போட்டிக்கான பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் இடம்பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் தங்களுக்குள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையில் இதுவரை நான்கு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை மறுநாள் (ஜனவரி 31) திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் தொடர்ச்சியாக ரன்கள் குவிக்கத் தவறி வரும் நிலையில், கடைசி டி20 போட்டிக்கான பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் இடம்பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான இந்த டி20 தொடர் சஞ்சு சாம்சனுக்கு சிறப்பானதாக அமையவில்லை. முதல் நான்கு போட்டிகளிலும் பிளேயிங் லெவனில் இடம்பெற்று தொடக்க ஆட்டக்காரராக விளையாடிய அவர் 10, 6, 0 மற்றும் 24 ரன்கள் முறையே எடுத்தார். டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக சஞ்சு சாம்சனின் ஃபார்ம் இந்திய அணிக்கு கவலையளிப்பதாக உள்ளது.
பிளேயிங் லெவனில் இடம்பெறுவாரா?
சஞ்சு சாம்சனின் ஃபார்ம் கவலையளிப்பதாக இருக்கும் நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இஷான் கிஷன் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜியோஹாட்ஸ்டாரில் அவர் பேசியதாவது: இந்திய அணி நிர்வாகத்தில் நான் இடம்பெற்றிருந்தால், நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக இஷான் கிஷனை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க வேண்டும் எனக் கூறுவேன். கடைசிப் போட்டிக்கு இஷான் கிஷனே என்னுடைய விக்கெட் கீப்பர் பேட்டருக்கான தெரிவாக இருப்பார். இஷான் கிஷனை விக்கெட் கீப்பர் பேட்டராக நான் தேர்ந்தெடுக்கக் காரணம், அவரையே டி20 உலகக் கோப்பைக்கான விக்கெட் கீப்பர் பேட்டராக களமிறக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டி மட்டுமின்றி, உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக நடைபெறும் பயிற்சி ஆட்டங்களிலும் இஷான் கிஷன் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டராக களமிறக்கப்பட வேண்டும். டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டராக இஷான் கிஷன் விளையாட வேண்டும் என்பதை நான் உறுதியாகக் கூறுவேன் என்றார்.
முன்னதாக, நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக இஷான் கிஷன் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட வேண்டும் என இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளரான யுஸ்வேந்திர சஹால் தெரிவித்திருந்தார்.
இந்தியா - நியூசிலாந்து இடையேயான கடைசி டி20 போட்டி நாளை மறுநாள் (ஜனவரி 31) திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் அபிஷேக் சர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராக யார் களமிறங்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. கடைசி டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் இடம்பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.