தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நேர்மறையான மனநிலையில் இருப்பதற்கு கேப்டன் ரோஹித் சர்மா உதவியதாக இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. இதன்மூலம், டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் இந்திய அணி சமன் செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து மொத்தமாக 50 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நேர்மறையான மனநிலையில் இருப்பதற்கு கேப்டன் ரோஹித் சர்மா உதவியதாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: புதிய பந்தில் வேகமாக ரன்களை எடுக்க வேண்டிய சூழலில் நேர்மறையான மனநிலையில் செயல்பட கேப்டன் ரோஹித் சர்மா உதவியாக இருந்தார். போட்டியில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்ததால், சிறப்பான தொடக்கத்தை அளிக்க வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய மனதில் இருந்தது. கடந்த 3 இன்னிங்ஸ்களில் இதனையே செய்தேன். 4-வது இன்னிங்ஸிலும் அதனையே செய்தேன். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்த தொடர் எனக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பாக அமைந்தது. நான் எனது எல்லா விதமான ஷாட்களையும் முயற்சி செய்தேன். இருப்பினும், இந்த ஆடுகளங்கள் சவாலானதாக இருந்தது என்றார்.
இதையும் படிக்க: முதல் டெஸ்ட்டின் தோல்விக்கு இதுதான் காரணம்: கே.எல்.ராகுல்
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 23 பந்துகளில் 28 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.