இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முழு உடல்தகுதியுடன் தயாராவதற்கு முக்கியத்துவம் அளித்து வருவதாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஜனவரி 25 முதல் தொடங்கவுள்ளது.
இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முழு உடல்தகுதியுடன் தயாராவதற்கு முக்கியத்துவம் அளித்து வருவதாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக முகமது ஷமி பேசியதாவது: அடுத்த இரண்டு தொடர்கள் மிகப் பெரிய தொடர்கள் என்பதால் என்னை முழு உடல்தகுதியுடன் வைத்துக் கொள்ள வேண்டும். எனது உடல் தகுதியில் கவனம் செலுத்த உள்ளேன். எனது திறமை குறித்து கவலையில்லை. முழு உடல்தகுதியுடன் இருக்கும்பட்சத்தில் எனது திறமை மைதானத்தில் வெளிப்படும் என்றார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக இந்திய அணியில் முகமது ஷமி இடம்பெறவில்லை. அவர் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்திலிருந்து மீண்டு குணமடைந்து வருகிறார். 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டியில் அபார பந்துவீச்சு திறமையை வெளிப்படுத்திய முகமது ஷமிக்கு இன்று (ஜனவரி 9) அர்ஜுனா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.