50 ஓவர் உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக அகமதாபாதில் நடைபெற்ற போட்டியே தனது பதவிக்காலத்தில் சந்தித்த மிகவும் கடினமான தருணம் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் இயக்குநர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற தவறியது. பாகிஸ்தான் அணியின் மீதும் அந்த அணியின் கேப்டன் பாபர் அசாமின் மீதும் அணியின் முன்னாள் வீரர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் பாபர் அசாம் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டது உள்பட அதிரடியாக பல முடிவுகள் எடுக்கப்பட்டன. பாகிஸ்தான் அணியின் புதிய இயக்குநராக முகமது ஹபீஸ் நியமிக்கப்பட்டார்.
இதையும் படிக்க: சர்வதேச டி20 போட்டிகளில் டிம் சௌதி புதிய சாதனை!
இந்த நிலையில், 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக அகமதாபாதில் நடைபெற்ற போட்டியே தனது பதவிக்காலத்தில் சந்தித்த மிகவும் கடினமான தருணம் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் இயக்குநர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: உலகக் கோப்பையில் அகமதாபாதில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானுக்கு ஆதரவே இல்லை. அந்த சூழலில் விளையாடுவது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. உலகக் கோப்பையில் பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பாக விளையாட ஆதாரமாக இருந்தது ஹோட்டலில் இருந்து வரும்போது அவர்களுக்கு கிடைத்த ஆதரவும், மைதானத்தில் அவர்களுக்கு கிடைத்த ஆதரவுமே. ஆனால், அகமதாபாத் மைதானத்தில் எங்களுக்கு கொஞ்சம் கூட ஆதரவு இல்லை. பாகிஸ்தானுக்கு எதிரான சூழல் நிலவியதால் அந்தப் போட்டியில் விளையாடுவதே மிகவும் கடினமாக இருந்தது. இருப்பினும், பாகிஸ்தான் வீரர்கள் இதையெல்லாம் காரணமாக கூறாமல் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்தனர் என்றார்.
இதையும் படிக்க: தோனியிடம் கற்றுக் கொண்டதை செயல்படுத்த விரும்புகிறேன்: ஷிவம் துபே
அகமதாபாதில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.