இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இங்கிலாந்து முழுமையாகத் தயாராக இல்லை என அந்த அணியின் முன்னாள் வீரர் அலெய்ஸ்டர் குக் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற ஜனவரி 25 ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது.
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இங்கிலாந்து முழுமையாக தயாராக இல்லை என அந்த அணியின் முன்னாள் வீரர் அலெய்ஸ்டர் குக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்து அணிக்கு போதுமான பயிற்சி இல்லை. இந்தியாவுக்கு எதிராக கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்தியாவுடன் எங்களுக்கு 3 பயிற்சி ஆட்டங்கள் இருந்தன. அந்த பயிற்சியாட்டங்கள் எங்களை தயார்படுத்திக் கொள்வதற்கு உதவியாக இருந்தது. தற்போது பயிற்சி ஆட்டங்கள் இல்லாததால் போட்டியை நடத்தும் நாடுகளே ஆதிக்கம் செலுத்துகின்றன. இது ஆரோக்கியமான டெஸ்ட் கிரிக்கெட் கிடையாது.
இதையும் படிக்க: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் விராட் கோலி விலகல்!
இங்கிலாந்து அணி பேஷ்பால் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தின் பேஷ்பால் அணுகுமுறைக்கு சிறப்பானதாக அமைந்தது. அந்தத் தொடரை இங்கிலாந்து முழுமையாக கைப்பற்றியது. இந்தியாவுக்கு எதிராகவும் இங்கிலாந்து அணி தனது பேஷ்பால் யுக்தியைப் பயன்படுத்தி வெற்றி பெறும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்றார்.