அடிலெய்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளன் மேக்ஸ்வெல் மயங்கி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் கடந்த வாரம் நிகழ்ந்துள்ளது. அடிலெய்டில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மேக்ஸ்வெல் அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளார். இதனால் சுயநினைவை இழந்த அவர் மயங்கி விழுந்துள்ளார். பலமுறை எழுப்ப முயற்சி செய்தும் பலனளிக்காததால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே விசாரணையைத் தொடங்கிவிட்டது. மேக்ஸ்வெல் கலந்துகொண்ட அந்த இசை நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியாவுக்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்த கேப்டனான பாட் கம்மின்ஸும் கலந்து கொண்டுள்ளார். இசை நிகழ்ச்சி முடிந்தவுடன் சீக்கிரமே அவர் வீட்டுக்குச் சென்றதாகவும், மேக்ஸ்வெல் இருந்த இடத்துக்கு அவர் செல்லவில்லை எனவும் தெரிவித்துள்ளார். அதேபோல் தனிப்பட்ட ஒருவரின் செயல்களுக்கான பின்விளைவை அவர்களே சந்திக்க வேண்டும் எனவும் பாட் கம்மின்ஸ் தெரிவித்தார்.
இதற்கிடையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து மேக்ஸ்வெல்லுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த சம்பவத்துக்கும் மேக்ஸ்வெல்லுக்கு ஓய்வளித்ததற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.