இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி ராகுல் டிராவிட் தன்மீது வைத்துள்ள நம்பிக்கையை ஷுப்மன் கில் காப்பாற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ஷுப்மன் கில் பிசிசிஐ-ன் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு அவருக்கு சிறப்பான ஆண்டாக அமைந்ததால் இந்த விருதுக்கு அவரது பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். அதேபோல கடந்த ஆண்டு ஜனவரியில் டி20 போட்டியில் அறிமுகமான அவர் 14 போட்டிகளில் ஒரு சதத்துடன் 335 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள், டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட போதிலும், டெஸ்ட் போட்டிகள் அவருக்கு சிறப்பானதாக அமையவில்லை. இதுவரை இந்திய அணிக்காக 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷுப்மன் கில் வெறும் 304 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி ராகுல் டிராவிட் தன்மீது வைத்துள்ள நம்பிக்கையை ஷுப்மன் கில் காப்பாற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில் ஷுப்மன் கில் குறித்து பத்திரிகையாளர்களிடம் ராகுல் டிராவிட் பேசியதாவது: ஷுப்மன் கில் ஒரு மிகச் சிறந்த வீரர். கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த வீரராக மாறுவதற்கு சிறிது காலம் எடுக்கும். ஆனால், சில வீரர்கள் குறுகிய காலத்தில் மிகவும் வெற்றிகரமான வீரர்களாக மாறுவர். ஷுப்மன் கில் குறுகிய காலத்தில் வெற்றிகரமான வீரராக வலம் வருகிறார்.
இளம் வீரர்கள் சவாலான விக்கெட்டுகளில் விளையாடினர். இங்கிலாந்து ஆடுகளங்களாக இருக்கட்டும் அல்லது மேற்கிந்தியத் தீவுகளின் ஆடுகளங்களாக இருக்கட்டும். கடந்த 2-3 ஆண்டுகளாகவே அவர்கள் சவாலான ஆடுகளங்களில் விளையாடி வருகின்றனர். ஷுப்மன் கில் கடினமாக உழைக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் விரைவில் அவர் சிறப்பாக செயல்படுவார். அதற்கான முயற்சிகளில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். அவர் கடந்த முறை சிறப்பாக சதம் அடித்து அணிக்கு உதவினார். அவர் சரியான பாதையில் பயணித்து வருவதாக நான் நம்புகிறேன் என்றார்.