2023 ஆம் ஆண்டின் ஐசிசியின் ஒருநாள் போட்டியின் சிறந்த வீரருக்கான விருதை இந்திய அணியின் விராட் கோலி வென்றுள்ளார்.
இந்திய அணியின் ரன் மெஷின் என அழைக்கப்படும் இந்திய அணியின் விராட் கோலிக்கு கடந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்தது. கடந்த ஓராண்டில் ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி 1,377 ரன்கள் குவித்தார். அதில் 6 சதங்கள் மற்றும் 8 அரைசதங்கள் அடங்கும்.
இதையும் படிக்க: ஐசிசியின் சிறந்த கிரிக்கெட்டருக்கான விருதை வென்ற கம்மின்ஸ்!
மேலும், கடந்த ஆண்டில் சச்சின் டெண்டுல்கரின் பல ஆண்டுகளாக நீடித்து வந்த ஒருநாள் போட்டிகளில் அதிக சதமடித்த வீரர் என்ற சாதனையையும் அவர் முறியடித்தார். உலகக் கோப்பை தொடரிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார் விராட் கோலி. உலகக் கோப்பைத் தொடரில் 11 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 765 ரன்கள் குவித்தார்.
இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டின் ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீரருக்கான விருதினை விராட் கோலிக்கு ஐசிசி அறிவித்துள்ளது.
இந்த விருது விராட் கோலி பெறும் 7-வது ஐசிசி விருதாகும். ஒருநாள் போட்டிகளில் 4-வது முறையாக சிறந்த வீரருக்கான விருதினை அவர் பெறுகிறார். இதற்கு முன்னதாக, கடந்த 2012, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீரருக்கான ஐசிசி விருதினை விராட் கோலி வென்றது குறிப்பிடத்தக்கது.