
இந்திய மகளிர் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஆஷா ஷோபனா ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்க மகளிரணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று முன் தினம் (ஜூன் 16) பெங்களூருவில் உள்ள சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் இந்திய அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியில் அறிமுக வீராங்கனையாக களம்கண்ட ஆஷா ஷோபனா அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்த நிலையில், சின்னசுவாமி மைதானம் தனக்கு எப்போதும் சிறப்பானது எனவும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு நன்றி எனவும் கூறியுள்ளது முக்கியத்தும் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: சின்னசுவாமி மைதானம் எப்போதும் எனக்கு சிறப்பானது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடியபோதும், சின்னசுவாமி மைதானம் எனக்கு சிறப்பானதாக இருந்தது. எனது பந்துவீச்சுக்கு ஏற்றதாக இந்த மைதானம் உள்ளது. அறிமுகப் போட்டியில் சிறப்பாக செயல்பட வேண்டும் என நினைத்தேன். தென்னாப்பிரிக்கா மிகவும் சிறந்த அணி. அவர்களுக்கு எதிராக பெரிய அளவிலான ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது.
மகளிர் பிரீமியர் லீக் மற்றும் ஆர்சிபி இரண்டுக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். எனது வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயமாக இவை இரண்டும் இருந்துள்ளன. சர்வதேசப் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடுவது என்பது சுலபமான விஷயம் கிடையாது. அரங்கம் நிறைந்த ரசிகர்களுக்கு மத்தியில் விளையாடும் அனுபவத்தை பெங்களூரு அணி எனக்கு வழங்கியதை மிகவும் சிறப்பான விஷயமாகப் பார்க்கிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.