
ரஞ்சியில் மும்பை அணிக்காக சதம் விளாசிய ஷர்துல் தாக்குர் குறித்து நகைச்சுவையாக பதிவு ஒன்றை எக்ஸ் வலைத்தளத்தில் அஸ்வின் பதிவிட்டுள்ளார்.
ரஞ்சிக் கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் நேற்று (மார்ச் 2) தொடங்கின. முதல் அரையிறுதிப் போட்டியில் மத்திய பிரதேசம் மற்றும் விதர்பா அணிகளும், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு மற்றும் மும்பை அணிகளும் விளையாடி வருகின்றன.
தமிழ்நாட்டுக்கு எதிரான போட்டியில் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் மும்பை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 353 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய ஷர்துல் தாக்குர் சதம் விளாசி அசத்தினார். அவர் 104 பந்துகளில் 109 ரன்கள் எடுத்தார். அதில் 13 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.
இந்த நிலையில், இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் ஷர்துல் தாக்குரின் அதிரடியான விளையாட்டு குறித்து நகைச்சுவையான பதிவு ஒன்றை எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: டேய் லார்டு ஷர்துல்! போதும் டா எனப் பதிவிட்டுள்ளார்.
மும்பை அணி தமிழ்நாட்டைக் காட்டிலும் 207 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.