இன்றைய நாள் தங்களுக்கு மிகுந்த ஏமாற்றமான நாள் என இங்கிலாந்து அணியின் உதவிப் பயிற்சியாளர் மார்கஸ் டிரஸ்கோத்திக் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று (மார்ச் 7) தர்மசாலாவில் தொடங்கியது. இந்திய அணி ஏற்கனவே தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், கடைசி போட்டியிலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 218 ரன்களுக்கு ஆட்டமிழக்க, முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.
இந்த நிலையில், இன்றைய நாள் தங்களுக்கு மிகுந்த ஏமாற்றமான நாள் என இங்கிலாந்து அணியின் உதவிப் பயிற்சியாளர் மார்கஸ் டிரஸ்கோத்திக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஏமாற்றமான நாள். டாஸ் வென்ற பிறகு நாங்கள் முதல் இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவிப்போம் என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால், நாங்கள் எதிர்பார்த்தது போன்று ஆட்டம் அமையவில்லை. நாங்கள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் பந்தில் வேகம் மற்றும் சுழல் அதிகம் இருந்தது. உணவு இடைவேளைக்கு முன்பு வரை ஆட்டம் சரியாக சென்று கொண்டிருந்தது. அதன்பின் நிலைமை முழுவதுமாக மாறிவிட்டது.
இன்றையப் போட்டியில் பந்தை அதிக அளவில் சிறப்பாக சுழலச் செய்தவர் குல்தீப் யாதவ். மற்ற வீரர்களைக் காட்டிலும் அவரது பந்தில் அதிக சுழல் இருந்தது. அதனால் அவருக்கு எதிராக விளையாடுவது கடினமாக இருந்தது. குறிப்பாக அவரது கூக்ளி பந்துகள் விளையாடுவதற்கு கடினமாக இருந்தது என்றார்.