இங்கிலாந்தை சிறப்பான அணியாக மாற்றியவர் பென் ஸ்டோக்ஸ் என அந்த அணியின் முன்னாள் வீரர் மொயீன் அலி புகழாரம் சூட்டியுள்ளார்.
இங்கிலாந்து அணியை ஒரு சராசரியான அணியாக இல்லாமல் அணியின் தரத்தை உயர்த்தியதற்கான பாராட்டுகள் கேப்டன் பென் ஸ்டோக்ஸையே சேரும் எனவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஜோ ரூட் மற்றும் அலெய்ஸ்டர் குக் தலைமையிலான இங்கிலாந்து அணியில் நான் விளையாடியுள்ளேன். ஆனால், பென் ஸ்டோக்ஸ் சற்று வித்தியாசமானவர். அவர் ஆட்டத்தை எடுத்துச் செல்லும் விதமும், அணியை வழிநடத்தும் விதமும் உண்மையில் மிகவும் சிறப்பாக உள்ளது. கிரேட் கிரிக்கெட்டிலிருந்து இங்கிலாந்து அணியை மகிழ்ச்சியை அளிக்கக்கூடிய கிரிக்கெட்டை விளையாடும் பாதைக்கு அழைத்துச் செல்கிறார்.
அனைவரும் பேஷ்பால் யுக்தி குறித்து பேசுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு பேஷ்பால் யுக்தியில் அதிகம் நம்பிக்கையில்லை. பென் ஸ்டோக்ஸ் சிறந்த கேப்டன் மற்றும் சிறந்த வீரர். கடினமான இந்திய ஆடுகளங்களில் பேஷ்பால் யுக்தியை இங்கிலாந்து வீரர்கள் செயல்படுத்தினார்கள். இந்திய அணியிலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜெய்ஸ்வால் விளையாடிய விதத்தைப் பாருங்கள். அவரது ஆட்டம் நம்பமுடியாத அளவில் இருந்தது. இது போன்ற ஆட்டத்தினையே மக்கள் காண விரும்புகின்றனர். டெஸ்ட் கிரிக்கெட்டிலும் மாற்றம் வேண்டும். அந்த மாற்றமே இங்கிலாந்தின் பேஷ்பால் யுக்தியின் நோக்கம் என்றார்.
முன்னதாக, இங்கிலாந்தின் வீழ்ச்சிக்கு காரணம் பென் ஸ்டோக்ஸின் கேப்டன்சியே என பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.