பேஷ்பால் யுக்தியை கைவிட்டு வீரர்கள் தங்களது தனிப்பட்ட திறன்களில் கவனம் செலுத்த வேண்டுமென இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் இழந்தது. இதனையடுத்து, இங்கிலாந்து அணியின் பேஷ்பால் யுக்தியின் மீதான விமர்சனங்கள் அதிகரித்தன.
இந்த நிலையில், பேஷ்பால் யுக்தியை கைவிட்டு வீரர்கள் தங்களது தனிப்பட்ட திறன்களில் கவனம் செலுத்த வேண்டுமென இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: பேஷ்பால் யுக்தியால் நாம் தொலைந்துவிட்டோம். பேஷ்பால் என்ற வார்த்தையை இங்கிலாந்து அணி நிர்வாகம் விரும்பவில்லை. இங்கிலாந்து வீரர்கள் அவர்களின் தனித் திறன்களில் கவனம் செலுத்த வேண்டும். எதிரணியைப் பாருங்கள். அவர்கள் எப்படி விளையாடுகிறார்கள். நாம் ரன்கள் சேர்க்க முடியாமல் திணறுவதற்கு காரணம் என்ன? நல்ல தொடக்கம் கிடைத்தும் ஸாக் கிராலி ஆட்டமிழப்பதற்கு காரணமென்ன? புதிய பந்தில் பென் டக்கெட் அற்புதமாக 150 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸுக்கு இந்த டெஸ்ட் தொடர் சிறப்பானதாக அமையவில்லை.
வீரர்கள் அவர்களது தனிப்பட்ட திறமைகளில் கவனம் செலுத்தி அதனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். பேஷ்பால் குறித்து அதிகமாகவே நான் எழுதியும் பேசியும் விட்டேன். இந்தத் தொடரில் விளையாடிய ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக செயல்பட்டனர். அதற்கு காரணம் அவர்களது ஆட்டத்தை அவர்கள் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே வருகிறார்கள். மூன்றாவது மற்றும் நான்காவது போட்டிகளில் இங்கிலாந்துக்கு சாதகமான சூழல் இருந்தது. ஆனால், அவர்கள் அதனைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
முதல் டெஸ்ட்டில் ஆலி போப்பின் அபாரமான பேட்டிங் மற்றும் டாம் ஹார்ட்லியின் சிறப்பான பந்துவீச்சினால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்திய ஆடுகளங்களில் இதுபோன்று வெற்றி பெறுவது அரிதாகவே நடைபெறும். இங்கிலாந்து அணி பேட்டிங்கில் சொதப்புவது இந்தத் தொடரில் தெளிவாகத் தெரிந்தது. இங்கிலாந்து அணியின் முக்கியப் பிரச்னையும் அதுவே. நல்ல தொடக்கம் கிடைத்தபோதும் நடுவரிசை ஆட்டக்காரர்கள் நிலைத்து நின்று ஆடத் தவறினர் என்றார்.