அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு முகமது ஷமி வெளியிட்ட புதிய அப்டேட்!
உடல்நிலை தேறிவரும் இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் முகமது ஷமியின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு முகமது ஷமி காயம் காரணமாக இந்திய அணியில் இடம்பெறவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் முகமது ஷமி இடம்பெறவில்லை. கணுக்கால் காயம் காரணமாக ஷமிக்கு பிப்.27 அன்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
முகமது ஷமிக்கு பிரதமர் மோடி விரைவில் நலம்பெற வேண்டுமெனக் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
காயம் காரணத்தினால் ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த ஆண்டு ஜூனில் தொடங்கும் டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஷமி இடம்பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்தது. இதற்கு பிசிசிஐ செயலர் ஜெய் ஷா, “வங்கதேசத்துக்கு எதிராக செப்டம்பரில் தொடங்கவுள்ள தொடரில் முகமது ஷமி இந்திய அணியுடன் இணைய வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த ஆண்டு செப்டம்பரில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேசம் 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில், “எனது உடல்நிலை தேறி வருவதை உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். அறுவை சிகிச்சை செய்து 15 நாள்கள் ஆகின்றன. சமீபத்தில் தையல் பிரிக்கப்பட்டது. என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். குணமடையும் எனது அடுத்த கட்ட நிலைமைகளுக்காக காத்திருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.