இந்திய வீரர் ரிஷப் பந்த்தின் ’கம்பேக்’ கதையை விடியோவாக வெளியிட்டுள்ளது பிசிசிஐ நிர்வாகம்.
ரிஷப் பந்த் கடந்த 2022 டிசம்பர் 30-ஆம் தேதி உத்தரகண்டின் ரூர்கீ பகுதியில் காரில் செல்லும்போது பயங்கர விபத்தை சந்தித்து படுகாயமடைந்தார். முழங்காலில் தீவிர காயம், மணிக்கட்டு மற்றும் கணுக்கால் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. தேவையான அறுவைச் சிகிச்சை மற்றும் ஓய்வுக்குப் பிறகு தனது முழு உடற்தகுதியை மீட்டெடுக்கும் முயற்சியில் இருந்தார் அவர்.
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த், எதிர்வரும் ஐபிஎல் போட்டியில் விக்கெட் கீப்பர் - பேட்டராக செயல்படுவதற்கு முழு உடற்தகுதியுடன் இருப்பதாக பிசிசிஐ செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
'இம்பாக்ட் பிளேயர்'-ஆக ஆட்டத்தின் இடையே அவர் களமிறக்கப்படலாம் என்று கருதப்பட்ட நிலையில், தற்போது முழுமையான வீரராக, மீண்டும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாகவே அவர் செயல்பட இருக்கிறார்.
இந்நிலையில், பிசிசிஐ புதிய விடியோ வெளியிட்டுள்ளது. இந்த விடியோவில் ரிஷப் பந்த்தின் உத்வேகம், மன உறுதி, கிரிக்கெட் ஆடுகளத்தில் மீண்டும் அவரைக் கொண்டுவரும் நோக்கத்தினைப் பற்றிய விடியோ. கொடூரமான கார் விபத்தில் இருந்து எப்படி எல்லாம் மீண்டு வந்தார் என்பதைப் பின் தொடர்ந்து இந்த விடியோவை உருவாக்கியிருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
மிராக்கள்மேன் என்ற இந்த விடியோவின் முதல் பாகம் நாளை (மார்ச்.14) காலை 9 மணிக்கு பிசிசிஐ.டிவி இணையதளத்தில் வெளியாகும் என பிசிசிஐ அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
இந்த விடியோவில் பயிற்சியாளர்கள் அவருக்கு அளித்த பயிற்சிகள் குறித்தும் ரிஷப் பந்த் எப்படியெல்லாம் கடினமாக உழைத்தார் என்றும் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.