மீண்டும் அறிமுகப் போட்டியில் விளையாடுவது போன்ற உணர்வு ஏற்படுவதாக இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட கார் விபத்தில் ரிஷப் பந்த் பலத்த காயமடைந்தார். அதன் பின் 14 மாதங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாடவுள்ளார். இதனை அண்மையில் பிசிசிஐ உறுதி செய்தது. ரிஷப் பந்த் கிரிக்கெட் விளையாட முழு உடல்தகுதியுடன் உள்ளார் என பிசிசிஐ தெரிவித்தது.
இந்த நிலையில், மீண்டும் அறிமுகப் போட்டியில் விளையாடுவது போன்ற உணர்வு ஏற்படுவதாக ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நான் மிகுந்த உற்சாகமும், அதே வேளையில் பதற்றமாகவும் இருக்கிறேன். கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் அறிமுக வீரராக களமிறங்குவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. கார் விபத்துக்குப் பிறகு அனைத்துக் கடினமான சூழல்களையும் கடந்து மீண்டும் கிரிக்கெட் விளையாடவுள்ளது அதிசயமாக உள்ளது.
எனது ரசிகர்கள், நலன் விரும்பிகள் குறிப்பாக பிசிசிஐ மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடெமியின் உதவிப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். அவர்கள் அனைவரது அன்பும் ஆதரவும் எனக்கு மிகுந்த சக்தியைக் கொடுத்துள்ளது. தில்லி கேப்பிடல்ஸ் அணியில் மீண்டும் விளையாடவுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அணியில் விளையாடும் நாளை எதிர்பார்த்து ஆவலோடு காத்திருக்கிறேன் என்றார்.
வருகிற மார்ச் 23 ஆம் தேதி தில்லி கேப்பிடல்ஸ் தனது முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.