இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது 700-வது டெஸ்ட் விக்கெட் குறித்து மனம் திறந்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது 700-வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தினார். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் 700 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வேகப் பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
700-வது விக்கெட்டினை எடுப்பதற்கு முன்பு நடந்த சுவாரசியமான சம்பவம் குறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் மனம் திறந்துள்ளார்.
இது தொடர்பாக ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியதாவது: இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் பேட் செய்து கொண்டிருந்தார். அப்போது ரன் எடுத்து மறுமுனைக்கு வந்த குல்தீப் யாதவ், நான் உங்களின் 700-வது விக்கெட்டாக மாறப் போகிறேன் என்றார். அவர் ஆட்டமிழக்க முயற்சி செய்யப் போகிறேன் எனக் கூறவில்லை. என்னுடைய பந்துவீச்சில் ஆட்டமிழந்து எனது 700-வது விக்கெட்டாக அவர் மாறிவிடுவாரோ என்ற உணர்வு அவருக்குள் இருந்ததாகக் கூறினார். அவர் இவ்வாறு கூறிய அந்தத் தருணம் நாங்கள் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டோம் என்றார்.
அந்தப் போட்டியில் குல்தீப் யாதவ், ஜேம்ஸ் ஆண்டர்சனின் 700-வது டெஸ்ட் விக்கெட்டாக மாறியது குறிப்பிடத்தக்கது.