பாகிஸ்தானின் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக பாபர் அசாம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
டி20 உலகக் கோப்பை தொடங்குவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாம் மீண்டும் நியமிக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக வேகப் பந்துவீச்சாளர் ஷகீன் ஷா அஃப்ரிடி நியமிக்கப்பட்டார். அவரது தலைமையிலான பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் 1-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்த நிலையில், பாபர் அசாம் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பை மீண்டும் ஏற்றுள்ளார்.
இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: பாகிஸ்தான் கிரிக்கெட் தேர்வுக் குழுவின் ஒருமித்த கருத்துடன் பாபர் அசாமை பாகிஸ்தான் அணியின் (ஒருநாள் மற்றும் டி20) கேப்டனாக மீண்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியமிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பைத் தொடர் வருகிற ஜூன் 1 முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.